திருக்குறள் - 593     அதிகாரம்: 
| Adhikaram: ookkamutaimai

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

குறள் 593 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aakkam izhandhaemendru allaavaar ookkam" Thirukkural 593 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார். இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார் - நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார். ('ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார் - ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர் ; ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - தம் செல்வத்தை யிழந்தாராயினும் அதை யிழந்தேம் என்று துன்புறார். ஊக்கத்தினால் வேறு பொருள் புதிதாகத்தேடிக் கொள்ளலா மாதலின் , 'அல்லாவார்' என்றார் . ஒருவந்தம் நிலைபேறு. அது இங்கு நிலைபேறாக என்று பொருள் படுதலாற் குறிப்பு வினையெச்சம். பெயரெச்சமாயின் ஒருவந்தக் கைத்து என ஈறுகெட்டுப் புணர்ந்திருக்கும். கையிலுள்ள பொருள் கைத்து . கையது - கைத்து (கை+து). ஆக்கத்தை உண்டாக்குவது ஆக்கம்; ஆகுபெயர்.ஆதல் வளர்தல், மேம்படுதல். ஆ-ஆகு-ஆக்கம். செல்வம் நிலையான கைத்தன்மை. 'கைத்துண்டாம் போழ்தே கரவாதறஞ் செய்ம்மின் '(நாலடி.19) என்பதனால் அறியப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நிலைபெற்ற ஊக்கத்தினைக் கைப்பொருளாகக் கொண்டவர்கள் இழந்தாராயினும், கைப்பொருளை இழந்தோம் என்று மனம் வருந்த மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பயன் அற்றுப் போனதே என்று தன்நிலை இழக்க மாட்டார் ஊக்கத்தை ஒருவர் தனது கைத்துணையாய் வைத்துக்கொண்டால்.

Thirukkural in English - English Couplet:


'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.

ThirukKural English Meaning - Couplet -Translation:


They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property".

ThiruKural Transliteration:


aakkam izhandhaemendru allaavaar ookkam
oruvandham kaiththutai yaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore