திருக்குறள் - 468     அதிகாரம்: 
| Adhikaram: therindhuseyalvakai

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

குறள் 468 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aatrin varundhaa varuththam palarnhindru" Thirukkural 468 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும். (முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றின் வருந்தா வருத்தம் - தக்க வழியாற் கருமத்தை முயலாத முயற்சி ; பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - பின்பு பலர் துணை நின்று கருமங்கெடாமற் காப்பினும் கெட்டுப் போகும் . தக்கவழியால் முயலுவதாவது , இன்சொல்லை . நேர்மையாளன் , ஆண்மையில்லாதவன் , முதுகிழவன் , உலகவுவர்ப்புற்றோன் முதலியோரிடத்தும் பொருட்கொடையைப் பொருளாசைக்காரனிடத்தும் , மகட்கொடையைக் காமுகனிடத்தும் , பிரிப்பைத்தன்னொடு பொருந்தாதவனிடத்தும் ; தண்டித்தலைக் கயவனான எளியவனிடத்தும் , பயன் படுத்துதல் . பொத்துப்படுதல் துளைவிழுதல் அல்லது ஓட்டையாதல் . அது இங்கு அணிவகைப்பொருளிற் கருமக்கேட்டைக் குறித்தது . வருந்திச் செய்யும் முயற்சி வருத்தம் எனப்பட்டது தொழிலாகுபெயர் . இனி , வலிய படைக்கலங்களும் தகுந்த தலைவனும் நல் வானிலையும் (Weather) நிலநலமும் உணவு நிறைவும் ; அவ்வப்போது இடமும் வினையும் மாறும் பயிற்சியும் போர்விலக்காரமும் இன்றிக் குருட்டுத்தனமாக மிகப் பாடுபட்டுப் போர்செய்யும் படை எவ்வளவு பெரிதாயினும் , வெற்றியின்றி மடியும் என்றுமாம் .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


செய்து முடிக்க வேண்டிய வழியினால் தொழிலினை முயலாத முயற்சி, துணையாகப் பலர் இருந்து குற்றம் வராமல் காப்பாற்றினாலும் குற்றம் உடையதாகவே முடியும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நடைமுறைக்கு ஒத்துவராது என்று அறிந்தும் துவங்கினால் பலரால் பாராட்டப் பட்டாலும் தடைப் பட்டுவிடும்.

Thirukkural in English - English Couplet:


On no right system if man toil and strive,
Though many men assist, no work can thrive.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

ThiruKural Transliteration:


aatrin varundhaa varuththam palarnhindru
poatrinum poththup padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore