திருக்குறள் - 1149     அதிகாரம்: 
| Adhikaram: alararivuruththal

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

குறள் 1149 - திருவள்ளுவர் - ThiruValluvar

"alarnhaana olvadhoa anjaloambu endraar" Thirukkural 1149 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[வரைவிடை வைத்துப் பிரிவின்க ணாற்றாளாகிய தலைமகள் அவன் வந்து சிறைப்புறத்தானாத லறிந்து, அலரஞ்சி யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.] அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை-தலை நாளில் தம்மை எதிர்ப்பட்ட போதே, நான் உன்னை விட்டு ஒருபோதும் பிரியேன்; ஆதலால் நீ அஞ்சுதலை விட்டுவிடு என்று தேற்றியவர் தாமே, இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்தபின்; அலர்நாண ஒல்வதோ - அயலார் கூறும் அலருக்கு நாம் நாணக் கூடுமோ? கூடாதே!. கண்டார் நாணும் நிலைமையிலுள்ள நாம் நாணுதற்கு வழியேது என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வதந்திக்கு விலகவதோ அஞ்சதே என்றவர் பலரும் பழிக்கும்படி பிரியாமல் கூடி பிரிவதை இறுதியாக்கினார்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘அஞ்சாதே! பிரியேன்’ என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அவருக்கு நாணவும் நம்மால் இயலுமோ!

Thirukkural in English - English Couplet:


When he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.

ThiruKural Transliteration:


alarnhaaNa olvadhoa anjaloambu endraar
palarnhaaNa neeththak kadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore