திருக்குறள் - 479     அதிகாரம்: 
| Adhikaram: valiyaridhal

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

குறள் 479 - திருவள்ளுவர் - ThiruValluvar

"alavarinthu vaazhaadhaan vaazhkkai ulapoala" Thirukkural 479 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும். (அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையில் ; உளபோல இல் ஆகித்தோன்றாக் கெடும் - அவன் பல்வகைப் பட்ட பொருள்களும் உள்ளனபோலத்தோன்றி உண்மையில் இல்லாதனவாய்ப் பின்பு அப்பொய்த்தோற்றமும் இல்லாது அழியும் . அளவறிந்து வாழ்தலாவது , செலவை வரவிற்குச் சுருக்காவிடினும் அதற்கு ஒப்பவாவது செய்து ஈந்தும் நுகர்ந்தும் வாழ்தல் . தொடக்கத்திற்கேடு வெளிப்பட்டுத் தோன்றாமையின் 'உளபோல இல்லாகி 'என்றார் . "முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியு முளமே குன்று முண்டுநீர் பாடினிர் செலினே." (புறம் . 110) என்பது ஒருவாறு இக்குறட்கு எடுத்துக்காட்டாம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எது எப்படி என்ற அளவறிந்து எல்லைகள் கொண்டு வாழாதவர் வாழ்கை எல்லாம் இருப்பதுபோல் தோன்றி ஏதும் அற்றதாய் கெடும்.

Thirukkural in English - English Couplet:


Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.

ThiruKural Transliteration:


aLavaRinthu vaazhaadhaan vaazhkkai uLapoala
illaakith thoandraak kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore