திருக்குறள் - 1154     அதிகாரம்: 
| Adhikaram: pirivaatraamai

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

குறள் 1154 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aliththanjal endravar neeppin theliththasol" Thirukkural 1154 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தௌ¤வித்த சொல்லைத் தௌ¤ந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ? தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின்-தலைநாளில் எதிர்ப்பட்டபோதே பேரன்பு செய்து, நின்னிற் பிரியேன், அஞ்சேல் என்று தேற்றியவர் தாமே பின் மாறாப் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ-அவரிடத்தன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யென்று நம்பியவரிடத்துக் குற்ற முண்டோ? சொன்னதை நிறைவேற்றாமைக் குற்றம் அவரிடத்துத் தங்காவறு செலவழுங்குவி என்பது கருத்து. 'தேறியார், என்பது தன்னைப் பிறர் போற் கூறிய தன்மைப் படர்க்கை. ஒகாரவினா எதிர்மறைக் குறிப்பினது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பம் அளித்து அஞ்சதே என்று சொன்னவர் பிரிந்தார் என்றால் அவரது தெளிவான சொல்லை கேட்டு தேறியவர்க்கு உண்டோ தவறு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அருள் செய்த காலத்தில், ‘அஞ்சாதே’ என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப் பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?

Thirukkural in English - English Couplet:


If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?.

ThiruKural Transliteration:


aLiththanjal endravar neeppin theLiththasol
thaeRiyaarkku uNdoa thavaru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore