திருக்குறள் - 80     அதிகாரம்: 
| Adhikaram: anputaimai

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

குறள் 80 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anbin vazhiyadhu uyir nilai" Thirukkural 80 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பின் வழியது உயிர்நிலை - அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அஃது இல்லார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே. அன்பின் வழியது என்பது அன்பு செய்தற்கென்றே ஏற்பட்டது. இதன் விளக்கமே, அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. என்னுங் குறள். உயிர்நிலை என்பது கதவுநிலை என்பது போன்ற கூட்டுச் சொல். என்புதோற் போர்ப்பு என்றது பிணத்தினும் இழிந்த தென்னுங் குறிப்பினது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பினைக் கொண்டு அதன் வழியில் நிற்பதே உயிர் இருக்கும் உடம்பாகும். மற்ற அன்பில்லாத உடம்புகள் எலும்பினைத் தோலினாலே போர்த்திக் கொண்டிருப்பனவாகும். உயிர் நின்றன ஆகா.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்பின் பாதையே உயிரின் தன்மை,அன்பில்லாதவர்களுக்கு எலும்பு மேல் போர்த்திய தோல் போன்றதே உடம்பு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்.

Thirukkural in English - English Couplet:


Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.

ThirukKural English Meaning - Couplet -Translation:


That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

ThiruKural Transliteration:


anbin vazhiyadhu uyir-nilai aqdhilaarkku
enpudhoal poarththa udampu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore