திருக்குறள் - 36     அதிகாரம்: 
| Adhikaram: aran valiyuruththal

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

குறள் 36 - திருவள்ளுவர் - ThiruValluvar

"andrarivaam ennaadhu aranjeyka" Thirukkural 36 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம். இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும் அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோடொன்றி நின்று உதவுவதால், பொன்றாத்துணையாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரியரின் அன்பார்ந்த அறிவுரை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கடைசிக்கு காலத்தில் அறம் செய்வோம் என்று இருக்காமல் நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தல் இறக்குங் காலத்தில், உயிருக்கு அழியாத துணையாக இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறகு பார்போம் என்று இல்லாமல் அறம் செய்யவேண்டும்,இல்லையேல் வாழ்த்தும் பொழுது வாழ்த்தாத துணை போல் ஆகிவிடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத துணையாகும்.

Thirukkural in English - English Couplet:


Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise';
Thus, when thou diest, shalt thou find a help that never dies.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

ThiruKural Transliteration:


andraRivaam ennaadhu aRanjeyka matradhu
pondrungaal pondraath thunai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore