திருக்குறள் - 1076     அதிகாரம்: 
| Adhikaram: kayamai

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

குறள் 1076 - திருவள்ளுவர் - ThiruValluvar

"araiparai annar kayavardhaam kaetta" Thirukkural 1076 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான். இஃது அடக்கமில ரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் தம் காதாற்கேட்ட மருமச் செய்திகளைக் கொண்டுசென்று பிறர்க்கெல்லாஞ் சொல்லுதலால்; கயவர் அறை பறை அன்னர் - கீழ்மக்கள் விளம்பரஞ் செய்தற்குக் கொட்டப்படும் பேரிகையொப்பர். வெளிப்படிற் குற்றமாகுமென்று ஒருவன் மறைத்துச்சொன்ன செய்தி மறை. மறைக்கப்பட்டவர் ' பிறர் '. உய்த்தல் பொறையை ஏற்றிக் கடத்துதல். கீழ்மக்கட்கு மருமச் செய்திகளைப் பிறர்க்குச் சொல்லும்வரை அவற்றை உள்ளத்திற் கொண்டிருத்தல் ஒருபொறை (பாரம்) போலத் தோன்றுதலால், ' உய்த்து ' என்றார். 'பறையன்னர் ' என்றாரேனும், பறையறைந்து சொல்லுதலையே குறித்தலால் இது வினையுவமை. இக்குறளால் கயவர்க்கு மறையடக்க மின்மை கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறைந்து ஓசை எழுப்பும் பறை போன்றவர் கயவர் காரணம் கேட்ட மறைப்பொருளை தான் உணராது பிறர்க்கு உரைப்பதால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்.

Thirukkural in English - English Couplet:


The base are like the beaten drum; for, when they hear
The sound the secret out in every neighbour's ear.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard

ThiruKural Transliteration:


aRaipaRai annar kayavardhaam kaetta
maRaipiRarkku uyththuraikka laan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore