திருக்குறள் - 163     அதிகாரம்: 
| Adhikaram: azhukkaaraamai

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

குறள் 163 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aranaakkam vaentaadhaan enpaan piranaakkam" Thirukkural 163 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான். ('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆக்கம் அறன் வேண்டாதான் என்பான் -இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன். பொறாமைக்காரன் பிறனுக்கு ஒரு தீங்குஞ் செய்ய இயலாது தனக்கே கேட்டை வருவித்துக் கொள்கின்றான் என்பது, இதனாற் கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தினையும் செல்வத்தினையும் வேண்டாம் என்று சொல்லுகின்றவன், மற்றவன் செல்வத்தைக் கண்டபோது தாளாமல் பொறாமைப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறச் செயல்கள் தேவையற்றது என்பவர்கள் பிறச் செயல்களையும் செய்யாமல் அழுக்கற்றுப் போவார்கள்.

Thirukkural in English - English Couplet:


Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not, feeling envious pain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth".

ThiruKural Transliteration:


aRanaakkam vaeNtaadhaan enpaan piRanaakkam
paeNaadhu azhukkaRup paan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore