திருக்குறள் - 182     அதிகாரம்: 
| Adhikaram: purangooraamai

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

குறள் 182 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aranazhee i allavai seydhalin theedhae" Thirukkural 182 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


புறன் அழீஇப் பொய்த்து நகை - ஒருவனைக்காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல்; அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம். அறனழித்தலினும் புறனழித்தலும் அல்லவை செய்தலினும் பொய்த்து நகையும் தீதென நிரனிறையாகக் கொள்க. பழித்துரையால் அழித்தலாவது பெயரைக் கெடுத்தல். ' அழீஇ' ஈரிடத்தும் பிறவினைப் பொருளில் வந்த சொல்லிசையளபெடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனைக் காணாதபோது இகழ்ந்து பேசி, கண்டபோது பொய்யாகச் சிரித்துப் பேசுதல் என்பது, அறம் இல்லையென அழித்துப் பேசி தீமைகளைச் செய்வதைவிடத் தீமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறம் அற்றதும் தேவையற்றதும் செய்வதை விட தீதானது புறம் பேசி பொய்யாக நகைப்பது.

Thirukkural in English - English Couplet:


Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.

ThiruKural Transliteration:


aranazhee-i allavai seydhalin theedhae
puRanazhee-ip poiththu nakai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore