திருக்குறள் - 503     அதிகாரம்: 
| Adhikaram: therindhudhelidhal

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

குறள் 503 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ariyakatru aasatraar kannum theriyungaal" Thirukkural 503 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. (வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - அரும் பொருள் கூறும் சிறந்த நூல்களைக் கற்று ஐவகையும் அறுவகையுமாகிய குற்றங்கள் நீங்கியவரிடத்தும்; தெரியுங்கால் வெளிறுஇன்மை அரிதே - நுட்பமாக ஆராயுமிடத்து அறியாமை அல்லது குற்றம் அறவுமில்லாமை காண்பது அரிதே. பிறரிடத்துள்ள குற்றம் போல் விளங்கித் தோன்றாமல் மிகச் சிற்றளவாயிருப்பதால் 'தெரியுங்கால்' என்றார் . எல்லாமறிந்தவரும் எக்குற்றமுமில்லாதவரும் இவ்வுலகத் தின்மையால் , குற்றமற்றவனையே வினைக்கமர்த்தவேண்டு மென்று மேன்மேலும் ஆராய்ந்து கொண்டிருப்பின், இது எல்லையின்றியோடி ஒரு முடிவிற்கும் வர இடந்தராதாதலால் , ஓரிரு சிறு குற்றங் குறைகளிருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது இன்றியமையாத திறமுங் குணமுமுடையவரை அமர்த்திவிடுக என்பதாம் . உள்ளீடில்லாத வெறுமைபோலிருத்தலால் அறியாமையும் , விளையாத வெண்மரம் போலிருத்தலாற் குற்றமும் , வெளிறெனப்பட்டன , உம்மை உயர்வு சிறப்பு ஏகாரம் தேற்றம் . வெள் - வெளி - வெளில் - வெளிறு. 'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.' (குறள் . 772.) "ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்." (குறள் . 133.) என்று ஆசிரியர் கூறியிருப்பதால் , குடி என்பது இங்குப்பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப்பிரிவினை பற்றிய சிறு வகுப்பன்று . மேலும் , சோழனொருவன் மந்திரிப் பதவிக்குத் தக்கவன் நால்வகுப்பாருள் எவ்வகுப்பான் என்று வினவியதற்குப் பிற்காலத்து ஒளவையார் ஒருவர். "நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு." என்று விடையிறுத்ததும் கவனிக்கத்தக்கது . இம் முடிபுப்படியே குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியைச் சேர்ந்த அருண்மொழித்தேவர் இரண்டாங் குலோத்துங்கச் சோழனின் தலைமையமைச்சராக அமர்த்தப் பெற்றார் போலும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


சிறந்த அருமையான நூல்களைக் கற்றறிந்து குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அறியாமை என்பது இல்லாதிருப்பது அருமையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறப்பானவற்றைக் கற்றுக் குற்றங்கள் இல்லாதவர் இடத்திலும் தேடினால் குறை வெளிப்படாமல் இருப்பது கடினம்.

Thirukkural in English - English Couplet:


Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

ThiruKural Transliteration:


ariyakatru aasatraar kaNNum theriyungaal
inmai aridhae veLiRu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore