திருக்குறள் - 1007     அதிகாரம்: 
| Adhikaram: nandriyilselvam

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

குறள் 1007 - திருவள்ளுவர் - ThiruValluvar

"atraarkkondru aatraadhaan selvam mikanhalam" Thirukkural 1007 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி¢ தனியாளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. (நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளுமில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடாதவனது செல்வம் வீணாய்க் கழிதல் , மிக நலம் பெற்றாள் தமியள் மூத்த அற்று - குணத்திற்சிறந்த கட்டழகி யொருத்தி மணஞ்செய்து கொடுப்பாரின்மையால் கணவனின்றித் தனித்தவளாய் மூத்த தன்மைத்து. இதில் வந்துள்ள உவமம் பெண்ணின் உரிமையின்மையைக் காட்டுதலால், பெரும்பாலும் பண்டைக் காலத்திற்கே ஏற்றதாம்.எனினும் இக் காலத்திலும் இது நிகழக் கூடியதாதலால் உவமமாதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க. ' நலம் ' அகத்தழகு புறத்தழகு என்னும் இரண்டையுங் குறிக்கும். ' பெற்றாள்' என்பது இரண்டனையும் ஒருங்கே பெறுதலின் அருமையை உணர்த்தும்.பயன்படாமை செல்வ த்திற்கும் பெண்ணிற்கும் பொதுவேனும், செல்வம் நுகர்ச்சிப் பொருளாகவே யிருப்பதென்றும் ,பெண் கணவனை நோக்க நுகர்ச்சிப் பொருளாகவும் தன்னை நோக்க நுகர்வாளாகவும் இருப்பவள் என்றும் , வேறு பாடறிதல் வேண்டும். இதனால் தன் விருப்பப்படியே இறுதிவரை மணஞ் செய்யாதிருக்கும் குணமணிக் கட்டழகி , இக்குறட் கேற்ற உவமமாகாள் என்பதையும் அறிந்து கொள்க.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாதவற்கு கொடுத்து உதவாதவர் செல்வம் நல்லழகு பெற்றவள் தனித்தே வாழ்ந்து முதுமை அடைந்தது போன்றது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.

Thirukkural in English - English Couplet:


Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

ThiruKural Transliteration:


atraarkkondru aatraadhaan selvam mikanhalam
petraaL thamiyaLmooth thatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore