திருக்குறள் - 164     அதிகாரம்: 
| Adhikaram: azhukkaaraamai

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

குறள் 164 - திருவள்ளுவர் - ThiruValluvar

"azhukkaatrin allavai seyyaar izhukkaatrin" Thirukkural 164 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அறிவுடை யோர் பொறாமை கொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார்; இழுக்கு ஆற்றின ஏதம் படுபாக்கு அறிந்து-அத்தீய நெறியால் தமக்கு இருமையிலுங் கேடு வருதலை யறிந்து. அல்லவை செய்தலாவது, கல்வி செல்வம் அதிகாரம் ஆற்றல் முதலியன வுடையார்க்குத் தீங்கு எண்ணுதலும் சொல்லுதலும் செய்தலுமாம். பாக்கு ஒரு தொழிற்பெயரீறு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


பொறாமையினால் தமக்குத் துன்பம் வருவதை அறிந்தவர்கள், பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அழுக்கு மனதுடன் (பொறாமை) தேவையற்றதை செய்யமாட்டார்கள் இழிவான குணத்தால் ஏற்படும் துன்பத்தை அறிந்து.

Thirukkural in English - English Couplet:


The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

ThiruKural Transliteration:


azhukkaatrin allavai seyyaar izhukkaatrin
Edham padupaakku aRindhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore