திருக்குறள் - 1006     அதிகாரம்: 
| Adhikaram: nandriyilselvam

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

குறள் 1006 - திருவள்ளுவர் - ThiruValluvar

"edham perunjelvam thaan dhuvvaan thakkaarkkondru" Thirukkural 1006 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான்- தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் இயல்பில்லாதவனாய்; தான்துவ்வான் -அதன்மேல் தானும் நுகராதவனாயிருப்பவன்; பெருஞ்செல்வம் ஏதம் -அவ்விரண்டுஞ் செய்தற் கேற்ற தன் பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோயாவன். செல்வத்தின் பயன்படுந் தன்மையை நோய் போற் கெடுத்தலின், ' நோய் ' என்றார். ' தக்கார் ' அந்தணர்,அடியார்,புலவர் முதலியோர் ' தக்கார் என்றதனால் , ' தகுதியில்லார்க்கு ஈதல் தவறென்பது பெறப்படும். ' ஏதம்' ஆகுபெயர். எச்சவும்மை தொக்கது.இனி, அவ்விரு பயனும் கொள்ளாதவனது பெருஞ் செல்வம் துன்பமே தரும் என்பது அத்துணைச் சிறந்த தன்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்குத் தானே கேடு செய்கிறான் பெருஞ்செல்வத்தை தானும் அனுபவிக்காமல் தகுதியானவற்கும் கொடுக்காமல் ஈதல் இயல்பில்லாதவன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ் செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான்.

Thirukkural in English - English Couplet:


Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

ThiruKural Transliteration:


Edham perunjelvam thaan-dhuvvaan thakkaarkkondru
eedhal iyalpilaa thaan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore