திருக்குறள் - 207     அதிகாரம்: 
| Adhikaram: theevinaiyachcham

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

குறள் 207 - திருவள்ளுவர் - ThiruValluvar

"enaippakai yutraarum uyvar vinaippakai" Thirukkural 207 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


எனைப் பகை உற்றாரும் உய்வர்-எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்றவிடமெல்லாஞ் சென்று வருத்தும். தீவினைப் பயனுக்குத் தப்ப முடியாதென்பதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


எவ்வளவு பெரிய பகையுடையவர்களும் ஒருவாற்றால் ஒருகால் தப்பிவிடுவர். ஆனால், தீச் செயலாகிய பகை நீங்காமல் பின்னேயே போய்க் கொல்லும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எந்தவித எதிர்ப்பு பெற்றவரும் உயர்வடைவார். செயலால் வரும் எதிர்ப்போ ஓயாது சென்று விழ்த்தும்.

Thirukkural in English - English Couplet:


From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.

ThirukKural English Meaning - Couplet -Translation:


However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

ThiruKural Transliteration:


enaippakai yutraarum uyvar vinaippakai
veeyaadhu pinsendru adum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore