திருக்குறள் - 110     அதிகாரம்: 
| Adhikaram: seynnandri aridhal

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

குறள் 110 - திருவள்ளுவர் - ThiruValluvar

"enhnhandri kondraarkkum uyvundaam uyvillai" Thirukkural 110 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-எத்துணப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத்தீவினைகள் நீங்கும் கழுவாய் ( பிராயச் சித்தம்) உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கோ தப்பும் வழியே இல்லை. பேரறக் கெடுப்புகளாவன, ஆவின் மடியறுத்தலும் குழவிகளையும் நிறை சூலியரையும் தூய துறவியரையுங் கொல்லுதலும், ஊருண்ணுங் கிணற்றில் நஞ்சிடுதலும், இவை போல்வன பிறவுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கடமையாகச் செய்ய வேண்டுவனவாகிய அவ்வித நன்மையினைக் கெடுத்தவர்க்கும் தப்பிக்கும் வழியுண்டு. ஆனால், பிறர் செய்த நன்மையினைக் கெடுத்தவர்க்கு அத்தீமையினின்றும் தப்பிக்கும் வழியே இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. முக்தி இல்லை தான் பெற்ற உதவியை மறந்தவருக்கு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

Thirukkural in English - English Couplet:


Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

ThiruKural Transliteration:


enhnhandri kondraarkkum uyvuNdaam uyvillai
seynhnhandri kondra makaRku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore