திருக்குறள் - 1080     அதிகாரம்: 
| Adhikaram: kayamai

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

குறள் 1080 - திருவள்ளுவர் - ThiruValluvar

"etrir kuriyar kayavarondru utrakkaal" Thirukkural 1080 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர் யாதினுக்கு வல்லரெனின், தமக்கு ஒரு துன்பமுற்றால் விரைந்து தம்மை விற்க வல்லவர். இது நிலையிலர் என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர் ஒன்று உற்றக்கால் விரைந்து விற்றற்கு உரியர் - கயவர் தம்மை யாதானும் ஒரு துன்பமுற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்கு உரியர்; எற்றிற்கு உரியர் - அதுவன்றி வேறு எத்தொழிற்கு உரியர்? (உணவின்மையாகப் பிறிதாக ஒன்று வந்து உற்ற துணையான் என்பது தோன்ற 'ஒன்று உற்றக்கால்' என்றும் . கொள்கின்றார் தம் கயமை அறிந்து வேண்டா என்றற்கு முன்னே விற்று நிற்றலின் 'விரைந்து' என்றும் கூறினார். ஒரு தொழிற்கும் உரியரல்லர் என்பது குறிப்பெச்சம். இதனான் தாம்பிறர்க்கு அடிமையாய் நிற்பர் என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- ஏதேனுமொரு துன்பம்நேர்ந்தவிடத்து அதைச் சாக்கிட்டுத் தம்மை விரைந்து பிறருக்கு விற்றற்கே யுரியர். 'ஒன்று' என்றது, பணத்தேவையான ஏதேனு மோர் அமையம் அல்லது பதவியைக் காத்துக்கொள்ளப் பிறர்க்கு அடிமைப்படும் நிலைமை கொள்பவர் தம் கயமை யறிந்து வேண்டாமென்னுமுன் தம்மை விற்று விடுதலும்,தன்மானமும் உரிமையுணர்ச்சியும் ஒரு சிறிதும் இல்லாதவர் என்பதும் தோன்ற, 'விரைந்து' என்றார். கீழ்மக்கள் ஒன்றிற்கும் உதவார் என்பது கருத்து. இக்குறளால் அவரின் அடிமை மனப்பான்மை கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எதற்கு உரியவர் கயவர் என்று உற்று நோக்க விலைக்கு தன்னை அடிமையாக்கி கொள்ளவதில் விரைவாக செயல்படுகிறார்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒரு துன்பம் வந்துவிட்டால், அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர்; அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியராகார்.

Thirukkural in English - English Couplet:


For what is base man fit, if griefs assail?
Himself to offer, there and then, for sale!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?.

ThiruKural Transliteration:


Etrir Kuriyar Kayavarondru Utrakkaal
Vitrarku Uriyar Viraindhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore