திருக்குறள் - 856     அதிகாரம்: 
| Adhikaram: ikal

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

குறள் 856 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ikalin mikalinidhu enpavan vaazhkkai" Thirukkural 856 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இகலில் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை- பிறரொடு மாறுபடுவதில் மிகுதல் தனக்கு நல்லதென்று அதனை மேற்கொள்வானது உயிர்வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து- நிலைதாழ்தலும் அதன்பின் முடிதலும் மிகநெருங்கியனவாம். மிகுதல் மேன்மேல் முனைதல். இனிதாதல் வெற்றிதருதல். 'தவல்' பொருட்கேடும் 'கெடல்' உயிர்க்கேடுமாம். 'நணித்து' என்பதனைத் 'தவலும் நணித்து', 'கெடலும் நணித்து' எனத் தனித்தனி இரண்டற்கும் பயனிலை யாக்குக. தவ்வல் தாழ்தல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகையுணர்வே மிக இனிமையானது என்பவன் வாழ்க்கை எளிதில் கெட்டு அழியும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது’ என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்.

Thirukkural in English - English Couplet:


The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.

ThiruKural Transliteration:


ikalin mikalinidhu enpavan vaazhkkai
thavalum ketalum naNiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore