திருக்குறள் - 905     அதிகாரம்: 
| Adhikaram: penvazhichcheral

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

குறள் 905 - திருவள்ளுவர் - ThiruValluvar

"illaalai anjuvaan anjumar regngnaandrum" Thirukkural 905 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும். இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்பவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செய்ய எப்போதும் அஞ்சுவான். நல்லார்; அரசனொழிந்த ஐங்குறவர், சான்றோர், அருந்தவர்,நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செய்தல் விருந்தோம்பலும் வேளாண்மை செய்தலும்.விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும் ' என்றார். "இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற் புல்லாள னாக" என்பது சிந்தாமணி(2319). "இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற் சாடினா டோடத் தான்." என்னும் பிற்காலத் தௌவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மனைவிக்கு அஞ்சுபவர் எல்லா வகையிலும் அஞ்சி நல்லார்கும் நல்லதைச் செய்ய மாட்டார்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.

Thirukkural in English - English Couplet:


Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.

ThiruKural Transliteration:


illaaLai anjuvaan anjumaR ReGnGnaandrum
nallaarkku nalla seyal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore