திருக்குறள் - 1315     அதிகாரம்: 
| Adhikaram: pulavi nunukkam

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

குறள் 1315 - திருவள்ளுவர் - ThiruValluvar

"immaip pirappil piriyalam endraenaak" Thirukkural 1315 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியால். இப்பிறப்பில் நாம் ஒருபோதும் பிரியோம் என்று கூறினேனாக; கண் நிறை நீர் கொண்டனன் - அதனால் மறுபிறப்பில் நான் பிரிந்துபோவேனென்று குறித்ததாகக் கருதித் தன் கண்நிறையக் கண்ணீரைப் பெருக்கிவிட்டாள். நான் சொன்ன வெளிப்படைச் சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொண்டதல்லது என்பால் தவறில்லை யென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இப்பிறவியில் பிரியாமல் இருக்கலாம் என்ற உடன் கண்கள் முழுவதும் நீர் நிரம்ப நின்றாள். (எப்பிறவியிலும் பிரியக்கூடாது என்ற நினைப்பில்)

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்’ என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவேம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள்.

Thirukkural in English - English Couplet:


'While here I live, I leave you not,' I said to calm her fears.
She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When I said I would never part from her in this life her eyes were filled with tears.

ThiruKural Transliteration:


immaip pirappil piriyalam endraenaak
kannirai neerkon danal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore