திருக்குறள் - 1294     அதிகாரம்: 
| Adhikaram: nenjotupulaththal

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

குறள் 1294 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ini anna ninnodu soozhvaaryaar nenjae" Thirukkural 1294 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! நீ புலவியை நீளச்செய்து பின்னை நுகரமாட்டாய்: ஆதலான் இனி அப்பெற்றிப்பட்ட எண்ணத்தை நின்னோடு எண்ணுவார் யார்? இல்லை.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) நெஞ்சே-என் உள்ளமே!; துனிசெய்து மற்றுத் துவ்வாய்-கணவரைக் கண்டால் அவர் தவறு நோக்கி முன்பு ஊடி அதை அளவறிந்து நீக்கி அதன் பின்பு கூடக் கருதாய் . கண்டவுடன் இன்பம் நுகரக் கருதுகின்றாய் ; இனி அன்ன நின்னொடு யார் சூழ்வார்-ஆதலால்,இனி அத்தகைய செய்திகளை உன்னோடு கூடி யார் எண்ணுவார்? நான் இனி எண்ணேன். முன்னெல்லாம் புலப்பதாக விருந்து இன்று புணர்ச்சி விதும்புதலின் இவ்வாறு கூறினாள் . ' அன்ன' என்றது ஊடும் அல்லது புலக்குந் திறங்களை , ' காண்' உரையசை 'மற்று' பின்மைப் பொருளது .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இனிமேல் நின்னொடு உறவு பாராட்டுபவர் யார் என்நெஞ்சே துன்பம் தந்து இன்பம் தூய்க்க மறுக்கிறாயே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ?

Thirukkural in English - English Couplet:


'See, thou first show offended pride, and then submit,' I bade;
Henceforth such council who will share with thee my heart?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?.

ThiruKural Transliteration:


ini-anna ninnodu soozhvaaryaar nenjae
thuniseydhu thuvvaaikaan matru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore