திருக்குறள் - 630     அதிகாரம்: 
| Adhikaram: itukkan azhiyaamai

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

குறள் 630 - திருவள்ளுவர் - ThiruValluvar

"innaamai inpam enakkolin aakundhan" Thirukkural 630 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம். மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்னாமை இன்பம் எனக்கொளின் -ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் தனக்கு இன்பமாகக் கருதுவானாயின்; தனக்கு ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் அவன் பகைவரும் அதனை விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும். இறைவனால் தடுக்கப்படாத எல்லா வினைக்கும் துன்பம் ஒன்றே தடையாதலின் , அத்துன்பத்தை இன்பமாகக் கொள்பவன் தொடங்கிய வினை யெல்லாம் வெற்றியாக முடியும் என்பது கருத்து. ஒன்னார் விழைதலாவது பாராட்டிப்பகை தீர்தல். 'கொளின்' என்பது கொள்வதன் அருமை யுணர்த்திநின்றது, துன்பத்தை இன்பமாகக் கொள்வது ஓகத்தால் ஓதி (ஞானம்) பெற்ற துறவியர் இயல்பாதலின், அவ்வுயர்நிலை யடைந்தமை பற்றி 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' உண்டாகும் எனினுமாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இடர்பாடுகள் இன்பமானது என்று செயல்படுபவர் எதிரிகளும் பாராட்டும் சிறப்பை பெறுவார்.

Thirukkural in English - English Couplet:


Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

ThiruKural Transliteration:


innaamai inpam enakkoLin aakundhan
onnaar vizhaiyunhj siRappu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore