திருக்குறள் - 1166     அதிகாரம்: 
| Adhikaram: patarmelindhirangal

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

குறள் 1166 - திருவள்ளுவர் - ThiruValluvar

"inpam kadalmatruk kaamam aqdhatungaal" Thirukkural 1166 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காமப்புணர்வினால் நமக்குவரும் இன்பம் கடல்போலப் பெரிது; பிரிவினான். அஃது அடுங்காலத்து வருந்துன்பம் அக்கடலினும் பெரிது. இஃது இன்பமுற்றார் துன்பமுறுதல் உலகியலென்று ஆற்றுவித்த தோழிக்கு ஆற்றலரிதென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('காமத்தான் இன்பமுற்றார்க்கு அதனினாய துன்பமும் வரும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ்செய்யுங்கால் அவ்வின்பம் கடல் போலப் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - இனி அது தானே பிரிவால் துன்பஞ் செய்யுங்கால், அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். ('மற்று' வினைமாற்றின்கண் வந்தது. 'அடுங்கால்' என வந்தமையின், மறுதலை யெச்சம் வருவிக்கப்பட்டது. பெற்ற இன்பத்தோடு ஒத்து வரின் ஆற்றலாம்; இஃது அதனது அளவன்று என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(காமத்தால் இன்பம் நுகர்ந்தவர் அதனால் வருந்துன்பத்தையும் பொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ் செய்யும்போது , அவ்வின்பம் கடல்போற் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - பின்பு அதுதானே பிரிவால் துன்பஞ் செய்யும்பொழுது , அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். காமத்தால் வரும் இன்பமுந் துன்பமும் அளவொத்திருப்பின் ஆற்றலாம் . துன்பம் இன்பத்தினும் மிகுத்திருப்பதால் ஆற்றுமாறில்லை யென்பதாம். 'மற்று' வினைமாற்று அல்லது பின்மைப் பொருளில் வந்த்து. 'அடுங்கால் ' என்று பின்றொடரில் வந்தமையால் , அதன் மறுதலை யெச்சம் முன்றொடர்க்கு வருவிக்கப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பத்தை கடல் அளவு மாற்றும் காமத்திற்கு தடை உண்டானால் கடலை விட துன்பம் பெரிதாகி விடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும் போது, அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே!

Thirukkural in English - English Couplet:


A happy love 's sea of joy; but mightier sorrows roll
From unpropitious love athwart the troubled soul.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.

ThiruKural Transliteration:


inpam kadalmatruk kaamam aqdhatungaal
thunpam adhanir peridhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore