திருக்குறள் - 628     அதிகாரம்: 
| Adhikaram: itukkan azhiyaamai

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

குறள் 628 - திருவள்ளுவர் - ThiruValluvar

"inpam vizhaiyaan idumpai iyalpenpaan" Thirukkural 628 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறுதலை இயல்பாகக் கொள்ளுமவன் துன்ப முறுதல் இல்லை. இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல்வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பம் விழையான் - இன்பத்தைச் சிறப்பாக விரும்பாது; இடும்பை இயல்பு என்பான் - இவ்வுலக வாழ்விலும் வினை முயற்சியிலும் துன்பம் நேர்வது இயல்பென்று தெளிந்திருப்பவன்; துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்தவிடத்துத் துன்பமுறுத லில்லை. இன்பத்தைச் சிறப்பாக விரும்பாமையால் இன்பம் இல்லாவிடத்தும், ஆள்வினைஞன் துன்பமுறுதல் இல்லை யென்றார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்ப நாட்டம் இல்லாமல் இடர்பாடுகள் இயல்பு என்று உணர்ந்தவர் துன்பப்படுவது இல்லை.

Thirukkural in English - English Couplet:


He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

ThiruKural Transliteration:


inpam vizhaiyaan idumpai iyalpenpaan
thunpam uRudhal ilan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore