திருக்குறள் - 547     அதிகாரம்: 
| Adhikaram: sengonmai

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

குறள் 547 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iraikaakkum vaiyakam ellaam avana" Thirukkural 547 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்; அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு. இது தனக்குக் காவலாம் என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ; முட்டாச் செயின் அவனை முறைகாக்கும் - முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும். முட்டில்லாமற் செய்தல் மனு முறைச் சோழன் தன்மகனை முறை செய்ததும், கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும் , போல்வதாம் . இனி, சிக்கலான வழக்குக்களைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும் , முட்டாது செய்தலின் பாற்படும் . 'வையகம்' முதலாகுபெயர் . 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


வையகத்தையெல்லாம் அரசன் காப்பாற்றுவான்; அந்த அரசனை அவனுடைய செங்கோல் காப்பாற்றும்; அதனை அவன் முட்டாமல் செலுத்துவானானால் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அருளுடன் காக்கப்படும் நாடுகளின் ஆட்சியாளர்களை ஆட்சி முறையே காக்கும் தவறுகள் செய்தாலும்.

Thirukkural in English - English Couplet:


The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

ThiruKural Transliteration:


iRaikaakkum vaiyakam ellaam avanai
muRaikaakkum muttaach seyin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore