திருக்குறள் - 564     அதிகாரம்: 
| Adhikaram: veruvandhaseyyaamai

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

குறள் 564 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iraikatiyan endruraikkum innaachchol vaendhan" Thirukkural 564 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன் தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும். இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவனென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் - குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன், உறை கடுகி ஒல்லைக்கெடும் - ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும். (நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இறை கடியன் என்று உரைக்கும் ; இன்னாச்சொல் வேந்தன்-நம் அரசன் கொடியவன் என்று குடிகளாற் சொல்லப்படும் துன்பந்தருந் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-வாழ்நாள் குறைந்து தன் செல்வத்தையும் விரைந்திழப்பான். இன்னாச்சொல் உளம் நொந்து உரைக்கும் சொல். 'உறை' முதனிலைத் தொழிலாகு பெயர். உறைதல்-தங்குதல் அல்லது குடியிருத்தல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


குடிமக்களால் 'தங்கள் தலைவன் கொடுமையானவன்' என்று சொல்லப்படும் துன்பமான சொல்லினையுடைய வேந்தன் ஆயுளும் குறைந்து செல்வமும் விரைவில் இழப்பான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இறை விரும்பாதவன் என்று சொல்லப்படும் கடுஞ் சொல்லுக்கு உட்பட்ட ஆட்சியாளர் எல்லை சுருங்கி சீக்கிரத்தில் அழிவார்.

Thirukkural in English - English Couplet:


'Ah! cruel is our king', where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

ThiruKural Transliteration:


iRaikatiyan endruraikkum innaachchol vaendhan
uRaikatuki ollaik kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore