திருக்குறள் - 310     அதிகாரம்: 
| Adhikaram: vekulaamai

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

குறள் 310 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irandhaar irandhaar anaiyar sinaththaith" Thirukkural 310 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர். (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் , கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இறந்தார் இறந்தார் அனையர்- சினத்தின் கண் அளவுகடந்தவர் உயிரோடிருப்பினும் செத்தவரை யொப்பர்.சினத்தை துறந்தார் துறந்தார் துணை- சினத்தை முற்றும் விட்டவர் இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தா ரளவினராவர். 'சினத்தை .......துணை' என்பதற்கு, "சினத்தை துறந்தார் சாதற்றன்மையராயினும் அதனை யொழிந்தாரளவினர்... சினத்தை விட்டார்க்குச் சாக்கா டெய்து தற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடுபெறுதல் ஒரு தலையாகலின் அவரை வீடு பெற்றாரோடொப்ப ரென்றுங் கூறினார்" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது உயர்வாய்த் தோன்றினும் சற்று வலிந்து பொருள் கொண்டதாகும். 'சினத்தை' என்பது முன்னும் பின்னும் இசையும் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


சினத்தில் மிகுந்து இருப்பவர்கள் உயிரோடிருப்பவர்களேயானாலும் செத்தவருக்கு ஒப்பாவார். அந்தச் சினத்தினை விட்டவர்கள் உடம்பால் சாதல் தன்மையரேயானாலும் இறவாதவர்களுக்குச் சமமாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மரணித்தவர் (சினம் கொண்டவர்) மரணித்தவருக்கு ஒப்பானவர் சினத்தை விட்டோழித்தவர் துறவிக்கும் துனையாகிறார்.

Thirukkural in English - English Couplet:


Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

ThiruKural Transliteration:


iRandhaar iRandhaar anaiyar sinaththaith
thuRandhaar thuRandhaar thuNai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore