திருக்குறள் - 1067     அதிகாரம்: 
| Adhikaram: iravachcham

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

குறள் 1067 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irappan irappaarai ellaam irappin" Thirukkural 1067 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ள நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி. இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இரப்பின்-இன்றியமையாமை பற்றி இரக்கநேரின்; கரப்பார் இரவன்மின் என்று-தம்மிடமுள்ளதை யில்லையென்று ஒளிப்பாரை மட்டும் இரக்கவே வேண்டாமென்று; இரப்பாரை எல்லாம் இரப்பன்-இவ்வுலகில் இரப்பாரையெல்லாம் நான் இரந்து வேண்டிக்கொள்கின்றேன். இது ஆசிரியர் கூற்று. இதனால் மேற்கூறிய நெறியின் கடுமையைத் தளர்த்தித் தம்மை நடைமுறைக்கேற்ற வழிகாட்டியாகக் காட்டியுள்ளார். ’கரப்பாரிரவன்மின்’ செய்யுள் நடைபற்றிய இரண்டாம் வேற்றுமைத்தொகை. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின் வருநிலை. இதனால் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இரந்து கேட்கிறேன் இரந்து கேட்பவர்கள் எல்லாரையும், இரந்து கேட்க அவமதிப்பவர் இடத்தில் இரந்து கேட்க வேண்டாம் என்று.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘உமக்கு இரக்க வேண்டுமானால், உள்ளதை ஒளிக்காமல் மறைப்பவரிடம் சென்று இரக்காதீர்கள்’ என்று இரப்பவரை எல்லாம் யான் இரந்து வேண்டுகின்றேன்.

Thirukkural in English - English Couplet:


One thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly".

ThiruKural Transliteration:


irappan irappaarai ellaam irappin
karappaar iravanmin endru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore