திருக்குறள் - 1243     அதிகாரம்: 
| Adhikaram: nenjotukilaththal

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

குறள் 1243 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irundhulli enparidhal nenje parindhullal" Thirukkural 1243 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது ('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது' என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இ-ரை.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - என் உள்ளமே ! நீ அவர்பாற் செல்வதுஞ் செய்யாது இறந்துபடுவதுஞ் செய்யாது , இங்கிருந்து கொண்டு அவர் வரவு நினைந்து வீணாக வருந்துவது ஏன் ? ; பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல் - இத்துன்ப நோயை உண்டாக்கியவரிடத்துத்தான் நம்மை அன்பாக நினைந்து நம்மிடம் வரக் கருதுதல் இல்லையே ! நம்பால் அருளிலராகவின் தாமாக வரார் . இனி , நாம்தான் அவரிடத்துச் செல்லவேண்டும் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இங்கிருந்தபடியே எண்ணி கலங்கும் நெஞ்சே பரிவற்று சிறுமை நோய் செய்தவருக்கு இது இல்லையே .

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே!

Thirukkural in English - English Couplet:


What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.

ThirukKural English Meaning - Couplet -Translation:


O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.

ThiruKural Transliteration:


irundhulli enparidhal nenje parindhullal
paidhalnoai seydhaarkan il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore