திருக்குறள் - 47     அதிகாரம்: 
| Adhikaram: ilvaazhkkai

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

குறள் 47 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iyalpinaan ilvaazhkkai vaazhpavan" Thirukkural 47 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - முறைப்படி இல்லறவாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; முயல்வாருள் எல்லாம் தலை - பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம். முற்றத்துறந்தார் யாரென மக்களால் அறியப் படாமையின், 'முயல்வாருளெல்லாம்' என்றும், இருவகை யறத்தார்க்கும் உதவியே வீடு பெறுதலின் 'தலை' என்றுங் கூறினார். என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப்பொருளது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லறத்திற்குரிய இயல்புகளுடனே இல்வாழ்க்கை நடத்துபவன், ஆசைகளை அடக்கிவாழும் துறவிகள் எல்லோரினும் மேலானவன்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இயல்பாக குடும்ப வாழ்க்கை வாழ்பவனே உண்மையறிய முயலும் அனைவரிலும் தலையானவன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்.

Thirukkural in English - English Couplet:


In nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.

ThiruKural Transliteration:


iyalpinaan ilvaazhkkai vaazhpavan enpaan
muyalvaaruL ellaam thalai

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore