திருக்குறள் - 485     அதிகாரம்: 
| Adhikaram: kaalamaridhal

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

குறள் 485 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaalam karudhi iruppar kalangaadhu" Thirukkural 485 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஞாலம் கருதுபவர் - உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர் ; கலங்காது - மனக்கலக்கமின்றி ; காலம் கருதிஇருப்பர் - தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி , அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர் . 'கலங்காது' என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும் . நட்பாக்கல் , பகையாக்கல் , பிரித்தல் , கூட்டல் , மேற் செல்லல் , இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள் , இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை , 'காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது' , என்பராதலின் , 'காலங் கருதியிருப்பர் 'என்றார் .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தவறாமல் பூமி முழுவதையும் கொள்ளக் கருதும் அரசர், தமக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற காலத்தினையே சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கலக்கம் இல்லாமல் தகுந்த காலத்தை எதிர்ப்பாத்துக் காத்திருப்பார் உலகத்தின் உயர்வை வேண்டுபவர்

Thirukkural in English - English Couplet:


Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.

ThirukKural English Meaning - Couplet -Translation:


They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.

ThiruKural Transliteration:


kaalam karudhi iruppar kalangaadhu
Gnaalam karudhu pavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore