திருக்குறள் - 1137     அதிகாரம்: 

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

குறள் 1137 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kadalanna kaamam uzhandhum madalaeraap" Thirukkural 1137 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கடலையொத்த காமநோயாலே வருந்தியும், மடலேற நினையாத பெண்பிறப்புப்போல மேம்பட்டது இல்லை. இது நும்மாற் காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ்வருத்த மொக்கும்: பெண்டிர்க்கு இப்பெண்மையான் மடலேறாததே குறையென்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற்பொருட்டுத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('பேதைக்கு என் கண் படல் ஒல்லா', என்பது பற்றி 'அறிவிலராய மகளிரினும் அஃது உடையராய ஆடவரன்றே ஆற்றற்பாலர்', என்றாட்குச் சொல்லியது.) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின் - கடல்போலக் கரையற்ற காம நோயினை அனுபவித்தும் மடலூர்தலைச் செய்யாது ஆற்றியிருக்கும் பெண் பிறப்புப்போல; பெருந்தக்கது இல் - மிக்க தகுதியுடைய பிறப்பு உலகத்து இல்லை. ('பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகின்றிலை', என்பதாம், இத்துணையும் தலைமகன் கூற்று. மேல் தலைமகள் கூற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அறிவிலராய மகளிரினும் அதனையுடைய ஆடவரன்றோ காமநோயால் வருந் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளற்பாலர் என்ற தோழிக்குச் சொல்லியது . ) கடல் அன்ன காமம் உழந்தும் - கடல் போலக் கரையற்ற காமநோயால் வருந்தியும் , மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் - அதை நீக்குதற்கு மடலேறாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புப் போலப் பெருந்தகுதியுடைய பிறப்பு இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை . அத்தகுதி ஆடவர்க்கு இயற்கையாக இன்மையை நீஅறிந்திலை போலும் என்பதாம் . இதுவரையுந் தலைமகன் கூற்று . உம்மை உயர்வு சிறப்பு .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கடல் அளவு காமத்தில் ஆட்பட்டாலும் மடலேறாப் பெண்ணின் பெருமை போன்று ஒன்று இல்லை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை.

Thirukkural in English - English Couplet:


There's nought of greater worth than woman's long-enduring soul,
Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

ThiruKural Transliteration:


kadalanna kaamam uzhandhum madalaeRaap
peNNin perundhakka thil.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore