திருக்குறள் - 287     அதிகாரம்: 
| Adhikaram: kallaamai

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

குறள் 287 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kalavennum kaarari vaanmai alavennum" Thirukkural 287 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


களவு என்னும் கார் அறிவு ஆண்மை-களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை ; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்-எல்லாப் பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு அளந்தறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை. இருள் என்பது அகவிருளாகிய மயக்கம். புறவிருளின் கருமை இனம் பற்றி அகவிருட்கும் ஏற்றப்பட்டது. களவையுந் திறம்படச் செய்வதற்கு அறிவு வேண்டியிருப்பதால், அத்தீய அறிவு காரறிவெனப்பட்டது. 'என்னும்' என்பது ஈரிடத்தும் 'ஆகிய' என்னும் பொருளது. ஒளியுடன் இருள்பொருந்தாததுபோலத் துறவறத்திற்குரிய தூய அறிவொடு தீய அறிவு பொருந்தாது என்பது கருத்து.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


திருட்டுத்தனம் என்ற திடமான செயல் தேவைகளின் அளவை அறிந்துக் கொண்ட ஆற்றல் மிகுந்தவரிடத்தில் இல்லை.

Thirukkural in English - English Couplet:


Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won.

ThirukKural English Meaning - Couplet -Translation:


That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

ThiruKural Transliteration:


kaLavennum kaaraRi vaaNmai aLavennum
aatral purindhaarkaNda il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore