திருக்குறள் - 403     அதிகாரம்: 
| Adhikaram: kallaamai 2

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

குறள் 403 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kallaa thavarum naninhallar katraarmun" Thirukkural 403 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின்-தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் கண் உரைநிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாதவரும் நனி நல்லர்-கல்லாத வரும் மிக நல்லவரேயாவர். உம்மை இழிவுசிறப்பு . அவையின்கண் அமைதியாயிருக்குங் கல்லாதார், பிறராற் பழிக்கப்படாது தம் சிறு மதிப்பைக் காத்துக் கொண்டும், அவையோர்க்கு வெறுப்பை விளைத்து அங்குநின்றும் அகற்றப்படாது அறிஞர் உரைகேட்டு இன்புறுவதொடு அறிவடைந்தும் , நல்லவராவ ராதலால் ' நனிநல்லார்' என்றார். ' நனி' உரிச்சொல். கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே யிரா அ துரைப்பினும் நாய்குரைத் தற்று. (நாலடி. 254)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தாமே தம்மையுணர்ந்துகொண்டு கற்றார் இருக்கும் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருந்தால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவர்கள் ஆவார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வி அறிவு இல்லாதவர்களும் மிகவும் சிறந்தவர்கள் கல்வி அறிவு பெற்றவர் முன் பேசாது இருந்துவிட்டால்

Thirukkural in English - English Couplet:


The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

ThiruKural Transliteration:


kallaa thavarum naninhallar katraarmun
sollaa thirukkap peRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore