திருக்குறள் - 1127     அதிகாரம்: 

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

குறள் 1127 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kannullaar kaadha lavaraakak kannum" Thirukkural 1127 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் கண் உள்ளாராக - எம் காதலர் எப்போதும் எம் கண்ணுள் ளிருக்கின்றாராதலால் ; கரப்பாக்கு அறிந்து - அவர் மறைவதையறிந்து ; கண்ணும் எழுதேம் - கண்ணிற்கு மையிடுதலுஞ் செய்யேம் . இடைவிடாது காணப்படுகின்றவரைப் பிரிந்தாரென்று கருதுவது எங்ஙனந் தகும் என்பதாம் . ' கரப்பாக்கு ' தொழிற்பெயர் . ' பாக்கு ' தொழிற்பெயரீறு . இழிவு சிறப்பும்மை இடமாற்றப்பட்டது .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்களின் உள்ளே காதலர் இருப்பதால் கண்களுக்கு மை எழுதுவதில்லை மறைத்துவிடும் என்பதை அறிந்து.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினைத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.

Thirukkural in English - English Couplet:


My love doth ever in my eyes reside;
I stain them not, fearing his form to hide.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

ThiruKural Transliteration:


kaNNuLLaar kaadha lavaraakak kaNNum
ezhudhaem karappaakku aRindhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore