திருக்குறள் - 1162     அதிகாரம்: 
| Adhikaram: patarmelindhirangal

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

குறள் 1162 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karaththalum aatren inh noayainhoai seydhaarkku" Thirukkural 1162 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்-இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்ககு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ? (ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அண்டையா ரறியாமல் மறைத்தல் , ஆண்டையார்க்குத் தூதுவிடல் என்னும் இரண்டனுள் ஒன்று செய்யவேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன் - இக்காம நோயை அக்கம்பக்கத்தார் அறியாவாறு மறைக்கவும் என்னால் முடியவில்லை ; நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்தரும் - இனி , இந்நோயை நீக்குமாறு இதைத் தந்த காதலர்க்கு அறிவிக்கவும் வெட்கமாயிருக்கின்றது. என் செய்வேன் ! நோய் மேன்மேலும் மிகுதலாற் 'கரத்தலு மாற்றேன்' என்றும் , பிரிந்துபோனது அண்மைக் காலமே யாதலானும் இன்பவாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளீட்டுதலைத் தடைசெய்வது அறிவுடைமையாகாமையானும், நாணுத்தரும், என்றும் கூறினாள்

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மறைத்து விடவழி இல்லை இந் நோயை நோய் உண்டாக்கியவர்க்கு உரைப்பதும் வெட்கம் தரும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காமநோயை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்ணைக்கு நாணம் தருகின்றதே!

Thirukkural in English - English Couplet:


I cannot hide this pain of mine, yet shame restrains
When I would tell it out to him who caused my pains.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

ThiruKural Transliteration:


karaththalum aatren-inh noayainhoai seydhaarkku
uraiththalum naanuth tharum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore