திருக்குறள் - 1086     அதிகாரம்: 
| Adhikaram: thakaiyananguruththal

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

குறள் 1086 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kodumpuruvam koadaa maraippin nadungagnar" Thirukkural 1086 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா. இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா. (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இதுவுமது கொடும்புருவம் கோடா மறைப்பின் - அருகிலுள்ள வளைந்த புருவங்கள் நேராக விருந்து மறைக்குமாயின்; இவள் கண் நடுங்க அஞர்செய்யல - இவள் கண்கள் நான் நடுங்குதற்கேதுவான துன்பத்தைச் செய்யமாட்டா. இயல்பாகக் கொடிய புருவங்கள் தம் நேர்மையில்லாத் தன்மையால், தமக்கருகிலுள்ள கண்கள் எனக்குக் கடுத்துன்பஞ் செய்வதைத் தடுக்காதுபோயின, என்பதுபடநின்றமையின், 'மன்' ஒழியிசைப்பொருளது 'புருவம்'; 'கண்' பால்பகாவஃறிணைப் பெயர்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆசையைக் கொடுக்கும் புருவம் வளையாமல் நிமிர்ந்து கோடாக மறைத்தால் நடுக்கம் இல்லாமல் செய்யும் இவள் கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


விளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால், அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே!

Thirukkural in English - English Couplet:


If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows.

ThiruKural Transliteration:


kodumpuruvam koadaa maRaippin nadungaGnar
seyyala man-ivaL kaN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore