திருக்குறள் - 109     அதிகாரம்: 
| Adhikaram: seynnandri aridhal

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

குறள் 109 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kondranna innaa seyinum avarseitha" Thirukkural 109 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொன்ற அன்ன இன்னா செயினும்-தமக்கு முன் பொருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்றபெருந் தீமைகளைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்-அவையெல்லாம் அவர் செய்த நன்மை யொன்றையே நினைத்த மட்டில் நன்றியறிவுடையார் மனத்தில் இல்லாமல் மறைந்துபோம். இஃது உண்மையான அல்லது தலையாய நன்றியறிவுடையார் செயலாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


கொல்லுதலைப் போன்றதொரு தீமையினை ஒருவர் செய்தாலும், முன்பு அவர் செய்த நன்மையொன்றினை நினைத்துப் பார்க்க அத்தீமையெல்லாம் கெடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கொல்வதை போன்ற துன்பம் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க துன்பம் மறையும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


ஒருவர் நம்மைக் கொன்றாற் போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.

Thirukkural in English - English Couplet:


Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.

ThiruKural Transliteration:


kondranna innaa seyinum avarseydha
ondru-nandru uLLak kedum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore