திருக்குறள் - 894     அதிகாரம்: 

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

குறள் 894 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kootraththaik kaiyaal viliththatraal aatruvaarkku" Thirukkural 894 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆற்றுவார்க்கு இன்னா செயல் - தாம் கருதியதை உடனே முடிக்கும் ஆற்றலுடைய பெரியார்க்கு, அஃதில்லாத சிறியார் தாம் முற்பட்டுத் தீமை செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்த அற்று- குறித்த காலத்தில் தானே தப்பாது வரக்கடவனாகிய கூற்றுவனை, அதற்கு முன்பே வலியக் கைதட்டி அழைத்தாற்போலும். கையால் விளித்தல் தொலைவிலிருப்பவரை உடனே வருவித்தற் குறிப்பினது. இவ்விரு குறளாலும் பெரியாரைப் பிழைப்பவர் தம் கேட்டைத் தாமே விரைந்து வருவித்தும் கொள்ளுதல் கூறப்பட்டது.'ஆல்' அசைநிலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


எமனை கையசைத்து அழைப்பது போன்றது வழிகாட்டுபவருக்கு வழிகாட்டாதவர் தீங்கு செய்வது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு, கைகாட்டி அழைப்பதைப் போலாகும்.

Thirukkural in English - English Couplet:


When powerless man 'gainst men of power will evil deeds essay,
Tis beck'ning with the hand for Death to seize them for its prey.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).

ThiruKural Transliteration:


kootraththaik kaiyaal viLiththatraal aatruvaarkku
aatraadhaar innaa seyal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore