திருக்குறள் - 544     அதிகாரம்: 
| Adhikaram: sengonmai

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

குறள் 544 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kutidhazheeik koaloachchum maanhila mannan" Thirukkural 544 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார். (அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளை ; உலகு தழீஇ நிற்கும் - நாடு முழுதும் விடாது பற்றி நிற்கும். அன்பாக அரவணைத்துக் காக்கும் அரசனைக் குடிகளும் அன்பாகப் போற்றிநிற்பர் என்பது கருத்து. அணைத்தல் இன்சொற் சொல்லுதலும் தளர்ந்த விடத்து வேண்டுவன கொடுத்துத் தாங்குதலும் . மாநில மன்னன் மூவேந்தருள் ஒருவனான பெருநில வரசன் . குறு நில மன்னர் , பெருநில மன்னர் என அரசர் இருதிறத்தினராதலால் , வேந்தனை மாநில மன்னன் என்றார் . கோல் , உலகு என்பன ஆகுபெயர் . கோல் என்ற தற்கேற்பச் சிறப்பாக ஆளுதலை ஓச்சுதல் என்றார் . ஓச்சுதல் உயர்த்துதல் . குடி என்றது தளர்ந்த குடிகளை , 'தழீஇ' இன்னிசையளபெடை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தம் குடிமக்களை அனைத்துச் செங்கோல் செலுத்தும் பெருநில மன்னனது அடியைப் பொருந்தி உலகத்தோர் விடாது நிற்பர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிமக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாய் ஆணைகள் பிறப்பிக்கும் ஆட்சியாளரையே பின்பற்றிச் செயல்படும் உலகம்.

Thirukkural in English - English Couplet:


Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.

ThiruKural Transliteration:


kutidhazheeik koaloachchum maanhila mannan
atidhazheei nhiRkum ulagu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore