திருக்குறள் - 502     அதிகாரம்: 
| Adhikaram: therindhudhelidhal

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

குறள் 502 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kutippirandhu kutraththin neengi vaduppariyum" Thirukkural 502 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி, வடுப்பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு. (குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


குடிப் பிறந்து - ஒழுக்கத்தால் உயர்ந்த குடும்பத்திற் பிறந்து ; குற்றத்தின் நீங்கி - நடுநிலையின்மை , விரைமதியின்மை அன்பின்மை , மடி , மறதி முதலியவற்றொடு ஐவகையும் அறுவகையுமான குற்றங்களினின்றும் நீங்கி , வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்குப் பழிவந்து விடுமோ என்று அஞ்சும் நாணுடையவ னிடத்ததே அரசனது தெளிவு. குடிப்பிறந்தார் வடுப்பரிதலை, "அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் - திங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வ ரொருமா சுறின்." (நாலடி . 151.) என்பதாலறிக . நாண் இழிதொழில் பற்றிய நன்மக்கள் அருவருப்பு . "கருமத்தா னாணுத னாணு" (குறள். 1011 ) என்றமை காண்க . ஏகாரம் தேற்றம் . கண்ணது - கட்டு (கண் + து ) . 'குற்றத்தினீங்கி வடுப்பரியு நாண்' உண்மையுமின்மையும் நால்வகைத் தேர்விலும் வெளிப்பட்டுவிடும் . குடிப்பிறப்பு தக்கார் உரையாலும் உறவினராலும் அறியப்படும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


உயந்த குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாமல் 'நமக்குக் கெடுதி வருமோ' என்று அஞ்சி நாணுகின்றவனைத் தேர்ந்து அமைத்துக் கொள்ளுவதே தலைவனுக்குத் தெளிவாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் பிறந்த குடியின் குற்றத்தை நீக்கி அவமானத் தழும்புக்கு அஞ்சுபவரே தெளிவுக்கு அடையாளமானவர்.

Thirukkural in English - English Couplet:


Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

ThiruKural Transliteration:


kutippiRandhu kutraththin neengi vaduppariyum
naaNutaiyaan suttae theLivu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore