திருக்குறள் - 968     அதிகாரம்: 
| Adhikaram: maanam

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

குறள் 968 - திருவள்ளுவர் - ThiruValluvar

"marundhoamatru oon ompum vaazhkkai perundhakaimai" Thirukkural 968 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்துச் சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ. பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? ('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மே¢ல் நின்றது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பெருந்தகைமை பீடு அழிய வந்த விடத்து - உயர்குடிப்பிறப்புத் தன் பெருமிதமாகிய மானங்கெட வந்தவிடத்து; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறவாது நின்று இகழ்வாரை வேண்டிப் பொருள் பெற்று இழிந்தவுடம்பைக் காக்கும் வாழ்க்கை பின்பும் இறவாமலிருத்தற்கு மருந்தாகுமோ! ஆகாதே! உயர் குணங்கட்கு இடமாதல்பற்றி உயர்குடிப்பிறப்பைப் 'பெருந்தகைமை' யென்றும், அப்பிறப்பிற்குப் பெருமிதத்தைத் தரும் மானத்தைப் 'பீடு' என்றும். அ ஃதழிந்தபின் உடம்பைப் பேணுதல் இழிந்ததாதலின் அதனை 'ஊனோம்பும் வாழ்க்கை' யென்றும், பின்னும், இறத்தல் உறுதியாகலின் 'மருந்தோ' என்றும் கூறினார். 'மற்று' பின்மைப் பொருளிடைச் சொல்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மருந்தால் சாதிக்க முடியாது ஊனில் உயிர் நிலைக்கும் வாழ்க்கை. எனவே பெருந்தகமை என்பது பீடை வந்த இடத்திலும் உயிரை மாய்க்காது இருத்தலே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல், மானம்விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பிணிக்கு ஏற்ற மருந்தாகுமோ?

Thirukkural in English - English Couplet:


When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.

ThiruKural Transliteration:


marundhoamatru oon-Ompum vaazhkkai perundhakaimai
peetazhiya vandha idaththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore