திருக்குறள் - 1206     அதிகாரம்: 
| Adhikaram: ninaindhavarpulampal

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

குறள் 1206 - திருவள்ளுவர் - ThiruValluvar

"matriyaan ennulen manno avaroti yaan" Thirukkural 1206 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்; இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(அவரொடு கூடி நுகர்ந்தகாலை யின்பத்தை நினைந்து இறந்து படுநிலை யடைகின்றாய். அதை மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) யான் அவரோடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு கூடிய காலை யின்பத்தை இடைவிடாது நினைத்தலாலேயே இன்று இறந்து படாதிருக்கின்றேன்; மற்று யான் என் உளேன் - வேறு எவ்வகையில் நான் உயிர்வாழ முடியும்? நான் உயிர்வாழ்வதற்குக் காதலர் தூது வருதல். நம் தூது அவரிடம் சேர்தல் முதலிய பிறவழிகளும் உளவேனும், யான் அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது என்பர் பரிமேலழகர். 'நாள்' ஆகுபொருள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மற்றபடி நான் தன் நெஞ்சத்தில் நினைத்து வாழ வேறு உண்டோ அவரோடு உறவுக் கொண்ட நாட்களைத் தவிர.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

Thirukkural in English - English Couplet:


How live I yet? I live to ponder o'er
The days of bliss with him that are no more.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?.

ThiruKural Transliteration:


matriyaan ennulen manno avaroti-yaan
utranaal ulla ulen.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore