திருக்குறள் - 624     அதிகாரம்: 
| Adhikaram: itukkan azhiyaamai

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

குறள் 624 - திருவள்ளுவர் - ThiruValluvar

"matuththavaa yellaam pakatannaan utra" Thirukkural 624 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - தடை ஏற்பட்ட விடமெல்லாம் பொறைவண்டி யழுந்தாது அதை இழுத்துச் செல்லும் எருதுபோல் எடுத்துக் கொண்ட வினையை விடா முயற்சியுடன் வெற்றியுறச் செய்து முடிக்க வல்லவனை ; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - அடைந்த துன்பம் தானே துன்பப் படுதலை யுடையதாம். 'மடுத்தவாயெல்லாம்' என்பன மேடு, பள்ளம், மணல் , சேறு முதலியனவாம். பகட்டின் தொழிலை "நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி" என்பதனாலும் (சீவக.2784), பகடன்ணான் இயல்பை. "கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்" என்பதனாலும் (புறம், 60), அறிக.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


விலக்கிய இடங்களில் எல்லாம் வண்டியினைப் பெரு முயற்சியுடன் இழுத்துச் செல்லுகின்ற மாட்டினைப் போல, தொழிலினை முயன்று செய்து கொண்டு போகின்றவனைத் துன்புறுத்தும் துன்பம், தானே துன்பப்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கரடுமுரடான பாதையை கடக்கும் களிறு போல் தனக்கு வந்த துன்பத்துனால் இடர்பபடாமல் கடக்க வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

ThiruKural Transliteration:


matuththavaa yellaam pakatannaan utra
idukkaN idarppaatu udaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore