திருக்குறள் - 969     அதிகாரம்: 
| Adhikaram: maanam

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

குறள் 969 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mayirnheeppin vaazhaak kavarimaa annaar" Thirukkural 969 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்- தனக்குச் சிறப்பாகக் கருதும் மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை யொத்த மானியர்; மானம் வரின் - தமக்குச் சிறப்பாகக் கருதும் மானம் என்னும் உயிர்நாடிப் பண்பு கெடும் நிலை வரின்; உயிர் நீப்பர் - அப்பண்பைக் காத்தற் பொருட்டு வேறொன்றுங் கருதாது உடனே தம் உயிரை விட்டு விடுவர். இங்கு 'மானம்' என்றது மானங் கெடு நிலையை. கவரிமான் மயிர் நீப்பின் வாழாது தன் மானத்தைக் காத்துக்கொள்வதால் மானமா என்பபெறும். மானமாக்கள் போன்றே மானமக்களும் தம் மானங் கெடவரின் உடனே உயிர் நீத்து அதைக் காத்துக்கொள்வர். இஃது, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்ததால் தன் கோல் கோடியபோது, தன் உயிர் துறந்து அதை நேராக்கியது போல்வதாம். "கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் - இடமுடைய வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின்." (நாலடி300 )

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மயிர் நீங்கினால் கவரிமான் வாழாது என்றால் அதுபோலவே உயிர் நீப்பர் மானம் வரின்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.

Thirukkural in English - English Couplet:


Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

ThiruKural Transliteration:


mayirnheeppin vaazhaak kavarimaa annaar
uyirnheeppar maanam varin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore