திருக்குறள் - 93     அதிகாரம்: 
| Adhikaram: iniyavaikooral

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

குறள் 93 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mukaththaan amarndhu inidhu noakki" Thirukkural 93 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது. ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தினால் விரும்பி இனிமையாகப் பார்த்து மனத்துடன் பொருந்திய இனிய சொற்களைச் சொல்லுவதில் அமையப் பெற்றதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்திற்கு நேராக அமர்ந்து இனிமையாக பார்த்து உள்ளத்திலிருந்து இனிய வார்த்தைகளை தருவதே அறம்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.

Thirukkural in English - English Couplet:


With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

ThiruKural Transliteration:


mukaththaan amarndhu inidhu-noakki akaththaanaam
insoa linadhae aRam.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore