திருக்குறள் - 1239     அதிகாரம்: 
| Adhikaram: uruppunalanazhidhal

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

குறள் 1239 - திருவள்ளுவர் - ThiruValluvar

"muyakkidaith thanvali poazhap pasapputra" Thirukkural 1239 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


முயக்கிடைத் தண்வளி போழ- அங்ஙனம் கைகளைத் தளர்த்த போது எம் இருவர்க்குமிடையே ஒரு சிறுதென்றற் போழ்ந்து நுழைந்ததாக; பேதை பெருமழைக் கண் பசப்பு உற்ற- அத்துணைச் சிற்றிடையீடும் பொறாது, என் இளங் காதலியின் பெரிய குளிர்ந்த கண்கள் பசலையடைந்து விட்டன. அத்தகைய கண்கள் நாடுங் காடும் ஆறும் மலையுமாகிய மாபேரிடையீடுகளையெல்லாம் எங்ஙனம் பொறுத்தனவோ! 'போழ' என்றது இருவருடம்பும் ஒன்றென ஒன்றியிருந்தமை தோன்ற நின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உறவுக்கு இடைப்பட்ட குளிர்காற்றால் பசப்புற்ற இளம்பெண் பெருமழையைக் கண்டது கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து, பசலை நிறம் அடைந்து விட்டனவே!

Thirukkural in English - English Couplet:


As we embraced a breath of wind found entrance there;
The maid's large liquid eyes were dimmed with care.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

ThiruKural Transliteration:


muyakkidaith thanvali poazhap pasapputra
paedhai perumazhaik kan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore