திருக்குறள் - 304     அதிகாரம்: 
| Adhikaram: vekulaamai

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

குறள் 304 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nakaiyum uvakaiyum kollum sinaththin" Thirukkural 304 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இ-ரை) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - இல்லறத்தார்க்கு அன்பாலும் துறவறத்தார்க்கு அருளாலும் முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியையும் மனத்தின்கண் உண்டாகும் மகிழ்ச்சியையும் கெடுத்தெழுகின்ற சினமல்லாது; பிறபகையும் உளவோ - வேறுபகைகளும் உண்டோ? இல்லை. சினத்தின் நீட்சியே பகையாதலானும் புறப்பகையில்லாத துறவியர்க்கும் சினம் அகப்பகையாய் அமைந்து பிறவித்துன்பத்தைப் பயத்தலானும், சினத்தின் வேறான பகை யில்லையாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்பத்தையும் கொண்டாட்டத்தையும் கொன்றுவிடும் சினத்தை விட வேறு பகையும் உண்டோ

Thirukkural in English - English Couplet:


Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.

ThiruKural Transliteration:


nakaiyum uvakaiyum kollum sinaththin
pakaiyum uLavoe piRa.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore