திருக்குறள் - 149     அதிகாரம்: 
| Adhikaram: piranil vizhaiyaamai

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

குறள் 149 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nalakkuriyaar yaarenin naama neer" Thirukkural 149 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நாமநீர் வைப்பின் - அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் ; நலக்கு உரியர் யார் எனின் - எல்லா நலங்களும் பெறுதற்குரியார் எவர் எனின் ; பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்குரியவளின் தோளைத் தழுவாதார். நாமம் அச்சம் இஃது உரிச்சொல். அகலம் , ஆழம் , தீயவுயிர்கள், கொந்தளிப்பு , நிலமுழுக்கு முதலியவற்றால் அஞ்சத்தக்கதாதலின், கடலை நாமநீர் என்றார். 'நலத்திற்கு' என்பது அத்துச் சாரியை தொக்கு நின்றது. 'தோள் தோய்தல்' இடக்கரடக்கல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அச்சம் தருவதாகிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளையும் அடைவதற்கு உரியவர்கள் யாரென்றால், பிறனுக்கு உரியவளது தோள்களை அணையாதவர்கள் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நலமுடன் இருக்க உரியவர் யாரென்றால் தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோல் தொட்டு தரதாவர்.

Thirukkural in English - English Couplet:


Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.

ThiruKural Transliteration:


nalakkuriyaar yaarenin naama-neer vaippin
piRarkkuriyaaL thoaLdhoayaa thaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore