திருக்குறள் - 1232     அதிகாரம்: 
| Adhikaram: uruppunalanazhidhal

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

குறள் 1232 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nayandhavar nalkaamai solluva poalum" Thirukkural 1232 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பசந்து பனிவாரும் கண்- பசலையடைதல் மேலும் நீர்வடியும் உன் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்- நம்மால் விரும்பப்பட்டவர் அன்பு செய்யாமையைப் பிறருக்குச் சொல்வன போலாகின்றன. ஆதலால் நீ ஆற்றல் வேண்டும். சொல்லுவ போலுதல் அதனை அவருய்த் துணருமாறு நிலைமை கெடுதல். நயந்தவர்க்கு என்று பாடமோதுவாரு முளர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பியவர் நெருக்காததை சொல்லுவது போல் உள்ளது பசந்து பனிவாரும் கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே!

Thirukkural in English - English Couplet:


The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover's lack of love appears.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

ThiruKural Transliteration:


nayandhavar nalkaamai solluva poalum
pasandhu panivaarum kan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore